Wednesday, November 18, 2009

ஸ்ரீ மணக்குள விநாயகர் ஸ்தல வரலாறு பகுதி-2

மணற் குளத்து விநாயகர்



முரட்டாண்டியில் பிரஞ்சு அதிகாரிகளின் தொல்லை
அதிகமானதால் சுவாமிகள் அவ்விடம் விட்டு நகர்ந்து
புதுவை பாலாஜி திரையரங்கு அருகில் உள்ள
ஆனந்த ரங்கபிள்ளையின் தோட்டத்திற்கு வந்து
ஒரு சிறு குடிசை அமைத்துக் கொண்டு
தங்கினார். அவ்விடத்து மக்கள் சுவாமிகளின் மேல்
மிகவும் அன்பாயிருந்து பணிவிடை செய்து வந்தனர்.
சுவாமிகளின் குடிசையை “சித்தன் குடிசை” என்று
அழைத்து வந்தனர். இன்றளவும் அப்பகுதி
அப்பெயரிலேயே அழைக்கபடுகிறது. அவரின்
அருளால் அப்பெயர் மக்கள் மனதில் நிலைத்து விட்டது.
சுவாமிகள், அங்கிருந்து மணற் குளத்து பிள்ளையாரை
தினமும் இரு வேளையும் வழிபட செல்ல மிகவும்
வசதியாய் அமைந்தது.
காலங்கள் சென்றன. இறைவனின் அழைப்பை அறிந்தார்.
அவர் வேண்டுகோளின் படி அவர் மறைவிற்கு
பின் அவருடைய உடல் பிள்ளையாருக்கு அருகிலேயே
மணற் குளத்தங்கரையில் அப்பகுதி மீனவர்களால்
சமாதி அமைக்கப்பட்டது.
தினமும் அப்பகுதி மக்கள் வழிபாடு நடத்தி வந்தனர்.
பிள்ளையாருடன் அவருக்கும் பூஜைகள் செய்யப்பட்டு
வந்தது.
மணற்குள விநாயகர் கோவில் கடற்கரையைச் சார்ந்துள்ளதால்
இது கணாபத்திய ஆகமப்படி அமைந்ததாகும்.
இவ்விநாயகருக்குப் புவநேச விநாயகர் என்ற பெயரும்
இருந்திருக்கலாம் என்று சரித்திர தமிழ் ஆராய்ச்சியாளர்
கூறுகின்றார்.
விநாயகருக்குப் பதினாறு மூர்த்தங்கள் உண்டென்று
சாத்திரங்களில் கூறப்பட்டிருக்கின்றது. பாலவிக்கிநேசர்
முதல் ஊர்த்துவ கணபதி ஈறாக உள்ள அப்பதினாறு
மூர்த்தங்களுள் புவநேசர் என்ற பதினான்காவதான
மூர்த்தத்தைச் சமுத்திரக் கரையில் பிரதிஷ்டை
செய்ய வேண்டுமென்று விதி இருக்கிறது.

அக்காலத்தில் வெள்ளைக்காரர்கள் (பிரஞ்சு) வசித்து
வந்த புதுவை பகுதியில் சாமியார் சமாதியாகி
விட்டபடியால் பொது மக்கள் “வெள்ளைகாரர் வீதியில்
தொள்ளைக் காதர் அமைந்து விட்டார்” என்று கூறி
வந்தனராம்.
அந்நாள் முதற்கொண்டு சித்தரை-வழிபடும்
அன்பர்கள் அனைவருக்கும் எண்ணிய எண்ணங்கள்
நிறைவேறுவது கண்டு-ஊர்மக்கள் மணற் குளத்து
விநாயகருக்கு கோயிலமைத்து வழிபட்டு வருகின்றனர்.
மணற்குளம் காலாவட்டத்தில் தூர்ந்து போய் விட்டது.
மணற்குளம் இருந்ததற்கான சான்றுகள் 250 வருடத்திற்கு
முன் புதுவை ஆனந்தரங்கபிள்ளையவர்கள் எழுதி
வைத்துள்ள நாட் குறிப்புகளில் உள்ளது.
அநீதியான காரியங்கள் நடந்து வந்த வெள்ளையர்
ஆட்சியில்,பழைய வேதபுரீஸ்வரர் ஆலயம் இடிக்கப்பட்டும்
வெள்ளையர் பகுதியிலேயே கோயில் கொண்டுள்ள
மணக்குள விநாயகரை நெருங்கக் கூட முடியவில்லை.
அன்னிய மதத்தைக் கொண்ட, புதுவையை ஆண்டு வந்த
அதிகார பலமிக்க அவ்வெள்ளையர்கள், விநாயகரை
அவ்விடத்தை விட்டு அப்புறப்படுத்த எவ்வளவோ முயற்சி
செய்து பார்த்தனர்.அளவிடமுடியாத கஷ்ட நஷ்டங்களைத்
தான் பிரதியாக கிடைக்கப் பெற்றனரே அன்றி விநாயகரை
இடம் பெயர்க்க முடியவில்லை. தாங்கள் எடுத்த முயற்சி
வீண் என்று பின்னர் உணர்ந்து மனந்தெளிந்து விநாயகரை
வழிபடலாயினர்.
அவர்கள் செய்கையைக் கொண்ட கர்ண பரம்பரை கதை
ஒன்று உண்டு.

0 comments:

 
© free template